Archives: ஏப்ரல் 2019

பரிசுத்தவான்களும் பாவிகளும்

யோவான் ஸ்நானனின் அடிச்சுவட்டைப் பின்பற்றி பாலைவனத்தில் வாழ்ந்து வந்த, எகிப்தைச் சேர்ந்த மேரி (கி.பி. 344-421). தன்னுடைய வாலிப வயதில் ஆண்களை மயக்கி தவறான இன்பம் அனுபவித்துவந்தாள். அவளுடைய கேவலமான வாழ்வின் உச்சக்கட்டத்தில் அவள் எருசலேமிற்குப் புனித பயணம் செய்பவர்களையும் கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு எருசலேம் சென்றாள். ஆனால், அங்கு அவள் தன்னுடைய பாவங்களைக் குறித்து குத்தப்பட்டவளாய் மன மாற்றம் பெற்றாள். அதன் பின்னர் மனந்திரும்பியவளாய் தனிமையில் பாலைவனங்களில் வாழ்ந்தாள். மேரியின் இத்தகைய முழு மாற்றம் தேவனுடைய கிருபையின் மகத்துவத்தையும், சிலுவையின் மீட்கும் வல்லமையையும் விளங்கச் செய்கின்றது.

இயேசுவின் சீடனான பேதுரு மூன்று முறை இயேசுவை மறுதலித்தான். இந்த மறுதலித்தலுக்கு சில மணி நேரத்திற்கு முன்புதான் பேதுரு இயேசுவுக்காகத் தான் மரிக்கவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தான். (லூக். 22:33) அவனுடைய தோல்வியைக் குறித்த உணர்வு அவனைக் கசக்கிப் பிழியும் அடியாக அமைந்தது (வச. 61-62) இயேசுவின் மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் பின்னர் பேதுரு சில சீடர்களோடு சேர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது இயேசு அவர்களுக்குத் தரிசனமானார். இயேசுவை மறுதலித்த மூன்று முறைகளுக்குப் பதிலாக, (யோவா. 21:1-3) அவன் இயேசுவின் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்த மூன்று வாய்ப்புகளைக் கொடுக்கின்றார். அவன் ஒவ்வொரு முறை வெளிப்படுத்தியபோதும் இயேசு தன்னுடைய ஜனங்களைப் பாதுகாக்கும் பொறுப்பினைக் கொடுக்கின்றார் (வச. 15-17). இயேசுவினுடைய இந்த அதிசயிக்கச் செய்யும் கிருபைதான் பேதுருவை கிறிஸ்துவின் சபையைக் கட்டும் படி முக்கிய பங்காற்றக் செய்தது. அவரை கிறிஸ்துவுக்காக தன் வாழ்வையே கொடுக்கச் செய்தது.

நம்மில் ஒவ்வொருவருடைய வாழ்க்கைச் சரித்திரமும் வாழ்வின் தோல்விகளும், ஏமாற்றங்களும் நிறைந்ததாக ஜெபஙகளாக ஆரம்பிக்கலாம். ஆனால். தேவனுடைய கிருபை வேறு வகையான முடிவையே கொண்டு வரும். அவருடைய கிருபையால் அவர் நம்மை விடுவித்து நம் வாழ்வை மாற்றுகின்றார்.

வாழ்வின் சோதனைகளைப் புரிந்து கொள்ளல்

என்னுடைய நண்பனின் தந்தையுடைய மருத்துவ ஆய்வு அறிக்கை, அவருக்கு புற்று நோயிருப்பதாகத் தெரிவித்தது. ஆனாலும் கீமோ சிகிச்சையின் போது அவர் இயேசுவின் மீது விசுவாசம் வைத்தார். அத்தோடு குணமடைந்த நிலையையும் அடைந்தார். அவர் பதினெட்டு மாதங்கள் புற்று நோயிலிருந்து விடுதலை பெற்றவராக வாழ்ந்தார். ஆனால், அது திரும்பவும் வந்தது. முன்னிலைமையையும் விட மோசமாகத் தாக்கப்பட்டார். அப்போதும் அவரும் அவருடைய மனைவியும்  கரிசனையோடும், ஏன் என்ற கேள்வியோடும் சந்தித்தபோதும் தேவன் மீதுள்ள நம்பிக்கையை விட்டுவிடவில்லை. ஏனெனில், முதல்முறை நோய் தாக்கிய போது தேவன் அவரை எவ்வாறு காத்துக் கொண்டார் எனக் கண்டு கொண்டனர்.

நாம் ஏன் சோதனைகளின் வழியே கடந்து செல்கின்றோம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. இதுவே யோபுவின் நிலையும் கூட, அவர் மிகவும் கொடுமையான விவரிக்க இயலாத துயரத்தையும், நஷ்டத்தையும் சந்தித்தார். ஆனாலும் அவருடைய அநேகக் கேள்விகளுக்கிடையே யோபு 12ல் தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்துகின்றார். “இதோ, அவர் இடித்தால் கட்ட முடியாது. அவர் மனுஷரை அடைத்தால் விடுவிக்க முடியாது” (வச. 14) “அவரிடத்தில் பெலனும் ஞானமும் உண்டு (வச. 16) “அவர் ஜாதிகளை பெருகவும் அழியவும் பண்ணுகிறார்” (வச. 23). இந்த நீண்ட பட்டியலில் யோபு, தேவன் ஏன் வேதனையையும் துன்பங்களையும் அனுமதித்தார், அவருடைய நோக்கம் என்ன என்பதைக் குறித்து குறிப்பிடவேயில்லை. யோபுவிடம் அதற்கு பதிலும் இல்லை. ஆனாலும் இவை அனைத்தின் மத்தியிலும் அவன் தைரியமாகச் சொல்கின்றான். “தேவனிடத்தில் ஞானமும், வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும். அவருக்குத்தான் ஆலோசனையும், புத்தியும் உண்டு” (12:13).

தேவன் ஏன் சில போராட்டங்களை நம் வாழ்வில் அனுமதிக்கின்றாரென நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. என்னுடைய நண்பனின் பெற்றோரைப் போன்று நாமும் நம்முடைய நம்பிக்கையை அவர் மீது வைப்போம். தேவன் நம்மை நேசிக்கின்றார். மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கின்றது (வச. 10) அவர் நம்மை விசாரிக்கின்றவர் (1 பேது. 5:7) ஞானமும், வல்லமையும், புத்தியும் கொள்ளலும் அவருக்கேயுரியது.

தேவன் தரும் பணி ஓய்வுத் திட்டம்

பழங்காலப் பொருட்களைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த முனைவர். வார்விக் ராட்வெல் தன்னுடைய பணி ஓய்விற்காகத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தபோது, இங்கிலாந்து தேசத்தில், லிச்பீல்டிலுள்ள பேராலயத்தில் ஓர் அரிய காரியத்தைக் கண்டுபிடித்தார். கட்டடக் கலைஞர்கள் அந்த தேவாலயத்தின் தளத்தின் ஒரு பகுதியை மிகவும் கவனத்தோடு தோண்டியெடுத்து, அதில் நகரக்கூடிய ஒரு தளத்தை அமைக்க முயற்சித்துக் கொண்டிருந்த போது அங்கு பிரதான தூதனான காபிரியேல் தூதனின் சிலையைக் கண்டெடுத்தனர். அது ஏறத்தாள 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கண்டு கொண்டனர். எனவே முனைவர் ராட்வெல்வின் பணி ஓய்வுத்திட்டம் தள்ளி வைக்கப்பட்டது. அவருடைய கண்டுபிடிப்பு ஒரு புதிய ஆர்வத்தோடு, ஒரு புதிய கோணத்தில் அவரைச் செயல்படவைத்தது.

மோசேயும் எண்பது வயதான போது ஓர் அனல்மூட்டும் கண்டுபிடிப்பிற்குள் இழுத்துக் கொள்ளப்பட்டான். அவனுடைய வாழ்வே மாறியது. எகிப்து ராஜகுமாரியின் வளர்ப்பு மகனாக இருந்தபோதும் அவன் தான் ஓர் எபிரெயரின் வழிவந்தவன் என்பதை மறக்கவேயில்லை. தன்னுடைய உறவினருக்கு இழைக்கப்பட்ட அநீதியைகக் கண்ட போது அவன் கொதித்தெழுந்தான் (யாத். 2:11-12) எபிரெயனை அடித்த ஓர் எகிப்தியனை மோசே கொன்று போட்டான் எனப் பார்வோன் கேள்வியுற்ற போது, மோசேயைக் கொன்று போட திட்டம் செய்தான். எனவே மோசே மீதியான் தேசத்திற்கு தப்பி சென்று அங்கு தங்கினான் (வச. 13-15).

நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர், அவன் எண்பது வயதான போது, தன்னுடைய மாமனாரின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, “அங்கே கர்த்தருடைய தூதனானவர் முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினி ஜீவாலையிலே நின்று அவனுக்கு தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான். முட்செடி அக்கினியால் ஜூவாலித்து எரிந்தும், வெந்து போகாமல் இருந்தது” (3:2). முட்செடியின் நடுவிலிருந்து தேவன் மோசேயைக் கூப்பிட்டார். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை விடுவித்து வழிநடத்துமாறு அவனிடம் கூறினார் (வச. 3-25).

உன் வாழ்வின் இந்த வேளையில் தேவன் எத்தகைய நோக்கத்திற்காக உன்னை அழைக்கின்றார்? உன்னுடைய பாதையில் தேவன் என்ன புதிய திட்டத்தை வைத்திருக்கின்றார்?

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஆனந்த கண்ணீர்

ஓர் நாள் காலையில் வீட்டை விட்டு வெளியேறிய டீன், தன்னுடைய சில நண்பர்கள் பலூன்களுடன் காத்திருந்ததைக் கண்டார். அவனுடைய நண்பன் ஜோஷ் முன்பாக வந்து, அவனிடத்தில் ஒரு கவரை கொடுப்பதற்கு முன்பாக, “உன்னுடைய கவிதைகளை ஓர் போட்டிக்கு அனுப்பி வைத்தோம்” என்றான். அந்த கவரின் உள்ளே “முதல் பரிசு” என்று எழுதப்பட்ட ஓர் அட்டை இருந்தது. விரைவில் அனைவரும் சேர்ந்த ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். டீனின் நண்பர்கள் ஓர் அழகான காரியத்தைச் செய்து, அவருடைய எழுத்துத் திறமையை உறுதிப்படுத்தினர்.

மகிழ்ச்சிக்காக அழுவது ஓர் முரண்பாடான அனுபவம். கண்ணீர் பொதுவாக வலிக்கான பதில், மகிழ்ச்சி அல்ல. மகிழ்ச்சி பொதுவாக சிரிப்புடன் வெளிப்படுத்தப்படுகிறது, கண்ணீரினால் அல்ல. இத்தாலிய உளவியலாளர்கள், நாம் ஆழமாக நேசிக்கப்படுவதை உணரும்போது அல்லது ஓர் முக்கிய இலக்கை அடையும்போது, ஆழ்ந்த தனிப்பட்ட அர்த்தத்தின்போது மகிழ்ச்சியின் கண்ணீர் வரும் என்று குறிப்பிட்டுள்ளனர். மகிழ்ச்சியின் கண்ணீர் நம் வாழ்வின் அர்த்தத்தை சுட்டிக்காட்டுகிறது என்ற முடிவுக்கு இது வழிவகுத்தது.

இயேசு சென்ற இடமெல்லாம் ஆனந்தக் கண்ணீர் பெருகுவதை நான் கற்பனை செய்கிறேன். குருடனாகப் பிறந்தவனின் பெற்றோர் இயேசு அவனைக் குணமாக்கியபோது (யோவான் 9:1-9), அல்லது மரியாள் மற்றும் மார்த்தாள், தங்கள் சகோதரனை மரணத்திலிருந்து எழும்பிய பிறகு (11:38-44) மகிழ்ச்சியில் அழாமல் எப்படி இருந்திருக்கக்கூடும்? தேவனுடைய ஜனம் ஓர் மறுசீரமைக்கப்பட்ட வாழ்க்கைக்கு கொண்டுவரப்படும்போது, “அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழி நடத்துவேன்” (எரேமியா 31:9) என்று தேவன் சொல்லுகிறார். 

மகிழ்ச்சியின் கண்ணீர் நம் வாழ்க்கையின் அர்த்தத்தை நமக்குக் காட்டினால், வரவிருக்கும் அந்த மகிமையான நாளை கற்பனை செய்துபாருங்கள். நம் முகங்களில் கண்ணீர் வழியும்போது, அவருடன் நெருக்கமாக வாழ்வதே வாழ்க்கையின் அர்த்தம் என்பதை சந்தேகமின்றி அன்று நாம் அறிவோம்.

 

விசுவாசத்தின் ஜெயம்

நான்கு வயது சிறுவனான கால்வினின் வழக்கமான சரீர ஆரோக்கிய சோதனையில் அவனது உடலில் சில எதிர்பாராத புள்ளிகள் கண்டறியப்பட்டன. அவனுக்கு சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, ஊசி போடப்பட்டு, அந்த இடத்தை கட்டுகட்டி அனுப்பினர். அந்த கட்டை அகற்றும் நாளில், அவனுடைய தந்தை கட்டை பிரிக்க முயன்றபோது, கால்வின் பயத்துடன் சிணுங்கினான். மகனுக்கு ஆறுதல் கூற முயன்று, அவனது தந்தை, “கால்வின், உன்னைக் காயப்படுத்தும் எதையும் நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று உனக்குத் தெரியும்!" என்று சொன்னார். கட்டை அகற்றும் பயத்தைவிட, தன் மகன் தன்னை நம்பவேண்டும் என்று அவனது தந்தை விரும்பினார்.

அசௌகரியத்தினால் நான்கு வயது குழந்தைகள் மட்டும் பயம் அடைவதில்லை. அறுவைசிகிச்சைகள், அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிதல், மன அல்லது உளவியல் சவால்கள் மற்றும் பலவிதமான பயங்கள், பெருமூச்சுகள், அழுகைகள் மற்றும் கூக்குரல்களை சந்திக்கும் அனைத்து தரப்பினர்களும் பயத்தினால் சூழப்படுகின்றனர். 

தாவீது, தன்மீது பொறாமைகொண்டு தன்னை கொல்ல வகைதேடிய சவுலிடமிருந்து தப்பித்து பெலிஸ்திய தேசத்திற்கு ஓடியபோதிலும், அங்கு அவர் கண்டுபிடிக்கப்பட்ட தருணம், வாழ்க்கையின் பயம் மிகுந்த ஓர் தருணமாயிருந்துள்ளது. அவர் அடையாளம் காணப்பட்டபோது, அவருக்கு என்ன நேரிடும் என்று கவலைப்பட்டார். (1 சாமுவேல் 21:10-11): “தாவீது... காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டான்.” இந்த சங்கடமான சூழ்நிலையைப் பற்றி யோசித்து, தாவீது “நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்… தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்” (சங்கீதம் 56:3-4) என்று எழுதுகிறார். 

வாழ்க்கையின் அசௌகரியங்கள் நமக்கு அச்சத்தைத் தூண்டும்போது நாம் என்ன செய்வோம்? நம்முடைய பரலோகத் தகப்பன்மீது நம்பிக்கை வைக்கலாம்.

 

ஜெபம் முக்கியமானது

“நடக்கவிருக்கும் மூளை ஸ்கேனுக்கான பிரார்த்தனைகள்;” “என் குழந்தைகள் மீண்டும் தேவாலயத்திற்கு வரவேண்டும்;“ “தன் மனைவியை இழந்த டேவின் ஆறுதலுக்காக" இதுபோன்ற ஜெப விண்ணப்பங்களை எங்களின் ஜெப ஊழியக் குழு வாரந்தோறும் பெறுகிறது. நாங்கள் அதற்காக ஜெபித்து, பதில் கடிதத்தையும் அனுப்புவது வழக்கம். ஜெப விண்ணப்ப பட்டியல் பெரிதாய் இருப்பதினால், எங்களுடைய முயற்சி கவனிக்கப்படாத வகையில் சிலவேளைகளில் இருக்கும். ஆனால் சமீபத்தில் டேவ் என்பவர் இறந்துபோன தன்னுடைய மனைவியின் இரங்கல் செய்தியின் நகலுடன், ஓர் நன்றிக் கடிதத்தையும் வைத்து அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த பின்பு எங்களுடைய சோர்வான சிந்தை மாறியது. ஜெபம் மிகவும் அவசியம் என்பதை நான் புதிதாக உணர்ந்தேன்.

நாம் ஊக்கமாக, இடைவிடாமல், நம்பிக்கையுடன் ஜெபிக்கவேண்டும் என்று இயேசு முன்மாதிரியாகக் கூறினார். பூமியில் அவருடைய வாழ்ந்த காலம் குறைவாகவே இருந்தது. ஆனால் அவர் ஜெபிப்பதற்காக தனி நேரம் செலவழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் (மாற்கு 1:35; 6:46; 14:32).

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலின் ராஜாவான எசேக்கியாவும் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டார். ஓர் வியாதியின் நிமித்தம் அவர் சீக்கிரம் மரிக்கப்போகிறார் என்று அறிவிக்கப்பட்டது (2 இராஜாக்கள் 20:1). எசேக்கியா வேதனையோடும் வியாகுலத்தோடும், “தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு” (வச. 2) கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினார். இந்த விஷயத்தில் தேவன் உடனே பதில்கொடுக்கிறார். தேவன் எசேக்கியாவின் வியாதியை சுகமாக்கி, அவருக்கு பதினைந்து ஆண்டுகள் ஆயுசுநாட்களை பெருகப்பண்ணி, அவருடைய எதிரிகளிடமிருந்து இளைப்பாறுதலையும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 5-6). எசேக்கியா நல் வாழ்க்கை வாழ்ந்தார் என்பதற்காக தேவன் இந்த கிருபைகளை அவருக்குக் கொடுக்கவில்லை, மாறாக, “என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும்” தேவன் அவருக்கு கிருபையளிப்பதாக கூறுகிறார். நாம் கேட்கிற அனைத்தையும் தேவனிடத்திலிருந்து பெறாமல் இருக்கலாம், ஆனால் தேவன் நம்முடைய அனைத்து ஜெபங்களையும் கேட்டு கிரியை நடப்பிக்கிறவராயிருக்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.